ADDED : ஆக 27, 2026 07:39 AM

இது குறித்து சென்னையை சேர்ந்த புளூ பாரத் எக்ஸிம் நிறுவன மேலாண் இயக்குநர் கே.எஸ்.கமாலுதீன் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி.
அரிசி ஏற்றுமதி வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
அரிசி ஏற்றுமதி வளர்ச்சியை பதிவு செய்தாலும் உள்நாட்டு நுகர்வு, காலநிலை மாற்றங்களால் அரிசி கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுகிறது. வெளிநாடுகளின் தேவைக்கேற்ப அரிசியை அனுப்ப முடியவில்லை.
சந்தை வாய்ப்பு எப்படி?
உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் நம் நாடு கடந்த 5 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 30 - 35 சதவீத பங்களிக்கிறது. அரிசி ஏற்றுமதி ஆண்டுக்கு 7.18 சதவீதம் வளர்ச்சிக்கு பங்களிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, துபாய், சவுதி அரேபியா, மலேஷியா, சிங்கப்பூர், பெனின் உள்ளிட்ட நாடுகளுக்கு அரிசி அதிகம் செல்கிறது. மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகளிலும் சந்தை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
வெளிநாடுகளில் விரும்பப்படும் ரகங்கள்?
பாஸ்மதி அல்லாத அரிசி வகையில் தமிழகத்தில் இருந்து ஆர்.என்.ஆர், சோனாமசூரி ஆகிய சன்ன ரக அரிசி ரகங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து ஐ.ஆர்.64, ஐ.ஆர்.11 உள்ளிட்ட மோட்டா ரகங்களுக்கும் வரவேற்பு உள்ளது.
தமிழகத்தின் அரிசி ஏற்றுமதி எப்படி உள்ளது?
வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 2024 - 25 நிலவரப்படி தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது. இதில் அரிசி பிரதானமாக உள்ளது. தேசிய அளவில் நெல் உற்பத்தியில் தமிழகம் 4.72 சதவீதம் பங்களிக்கிறது. தமிழகத்தை விட சிறிய மாநிலங்களான தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் நெல் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் அரிசி நுகர்வு அதிகம் என்றாலும், இங்கு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.
