ராணுவ தளவாட உற்பத்திக்கு ஆந்திராவில் 950 ஏக்கர் நிலம் பாரத் போர்ஜ் நிறுவனம் வாங்கியது
ராணுவ தளவாட உற்பத்திக்கு ஆந்திராவில் 950 ஏக்கர் நிலம் பாரத் போர்ஜ் நிறுவனம் வாங்கியது
ADDED : செப் 07, 2025 01:53 AM

அனந்தபூர்,:பாரத் போர்ஜ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அக்னியாஸ்ட்ரா, ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ராணுவ உற்பத்தி வளாகத்தை அமைக்க, 949.64 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.
இதற்காக, ஆந்திரா தொழில்துறை உள்கட்டமைப்பு கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இங்கு, வெடி குண்டுகள், வெடி மருந்துகள், பீரங்கி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய, தனித்தனி உற்பத்தி ஆலைகளை அமைக்க இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
எதிர்காலத்தில் ஏவுகணைகள், ஏவுகணை அமைப்புகள், விண்வெளி ஏவுதள வாகனங்கள் மற்றும் நவீன பாதுகாப்பு அமைப்புகளை உற்பத்தி செய்ய இலக்கு வைத்து உள்ளது.
பாரத் போர்ஜ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் அதன் முதல் காலாண்டு மொத்த வருவாய், கடந்த ஆண்டை விட 10 சதவீதம் குறைந்து, 2,105 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. லாபம் 27.1 சதவீதத்திற்கு குறைந்துள்ளது.
மொத்த வருவாய் குறைந்தாலும், ராணுவ உற்பத்திகளை மேற்கொள்ள, இந்நிறுவனம் கூடுதல் முதலீடுகளை செய்து வருகிறது.