ADDED : ஏப் 17, 2025 11:15 PM

புதுடில்லி:'புளூஸ்மார்ட்' நிறுவனம், அதன் மின்சார கார் பயண சேவைகளை நிறுத்தியுள்ளது. 'ஊபர்' நிறுவனத்துக்கு போட்டியாக பார்க்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது தன் கார்களை, ஊபருக்கு வாடகைக்கு வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்ட புளூஸ்மார்ட் டில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில், கிட்டத்தட்ட 8,500 மின்சார கார்களை இயக்கி வருகிறது.
இந்நிறுவனம், தற்போது மூடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதற்கு இதன் நிறுவனர்களின் மீதான செபியின் நடவடிக்கையே காரணம்.
புளூஸ்மார்ட்டின் நிறுவனர்களான அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனீத் சிங் ஜக்கி, மின்சார கார்கள் வாங்குவதற்காக பெற்ற கடனை, தங்களது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்தியதாக, செபி குற்றம் சாட்டியுள்ளது. இவர்கள் 'ஜென்சோல் இன்ஜினியரிங்' என்ற பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிறுவனத்தின் வாயிலாகவே, மின்சார கார் வாங்குவதற்கு கடன் வாங்கியுள்ளனர். இந்த தொகையை தவறாக பயன்படுத்தியாக வந்த புகாரை விசாரித்து வரும் செபி, மறு உத்தரவு வரும் வரை, ஜென்சோல் நிறுவனமும், நிறுவனர்கள் இருவரும், பத்திர சந்தை வணிகத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, பெங்களூருவில் புளூஸ்மார்ட் கார்கள், 'ஊபர் கிரீன்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

