சென்னையில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு: எண்ணெய் நிறுவனங்களுக்கு பொருட்கள் விற்க திட்டம்
சென்னையில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு: எண்ணெய் நிறுவனங்களுக்கு பொருட்கள் விற்க திட்டம்
ADDED : செப் 06, 2025 12:30 AM

சென்னை:எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை விற்க, சென்னையில் வரும், 17ம் தேதி வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியை, தமிழக அரசின் பேம்.டி.என்., நிறுவனம் நடத்த உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வாகன உதிரி பாகங்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, மத்திய - மாநில அரசுகளின் நிறுவனங்களிடம் தேவை இருந்தும், அவற்றுக்கு விற்பதற்கான வழிவகைகள் தெரிவதில்லை.
எனவே, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இடையிலான வியாபார இடைவெளியை குறைக்க, தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான சந்திப்புகளை, அரசு, பொதுத்துறை மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, 'பேம்.டி.என்' எனப்படும் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வசதியாக்கல் நிறுவனம் மேற்கொள்கிறது.
அதன்படி, எண்ணெய், எரிவாயு துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை விற்பதற்காக, சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டலில், வரும் 17ம் தேதி வாங்குவோர், விற்போர் நிகழ்ச்சியை, பேம்.டி.என்., நடத்துகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர், 'பேம்.டி.என்.,' இணையதளத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.