கோவை உலக ஸ்டார்ட்அப் மாநாடு வெப்சைட், லோகோ வெளியீடு
கோவை உலக ஸ்டார்ட்அப் மாநாடு வெப்சைட், லோகோ வெளியீடு
ADDED : ஏப் 27, 2025 01:16 AM

சென்னை:தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் சார்பில், கோவையில் நடக்க உள்ள உலக ஸ்டார்ட்அப் மாநாட்டுக்கான லோகோவை, சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி, நேற்று வெளியிட்டார். இதுதவிர, மாநாட்டுக்கான சிறப்பு இணையதளத்தையும், அவர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், 10,800 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், 49 சதவீதம் பெண்கள் தலைமையின் கீழ் செயல்படுகின்றன.
தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகத்தரத்தில் மேம்படுத்துவதற்கு, கோவை கொடிசியா வளாகத்தில், உலக புத்தொழில் மாநாடு - 2025ஐ ஜூன் அல்லது ஜூலையில், ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம்நடத்த உள்ளது.
மாநாட்டில், உலகின் பல பகுதிகளில் இருந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், பல்கலை பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். விண்வெளி தொழில்நுட்பம், மின் வாகனம், வேளாண் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின், 750 அரங்குகள் இடம்பெற உள்ளன.
புத்தொழில் மாநாட்டுக்கான லோகோவை, சென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி நேற்று வெளியிட்டார். மேலும் அவர், மாநாட்டுக்கான tngss.s tartuptn.in சிறப்பு இணையதளத்தையும் துவக்கி வைத்தார்.
இணையதளத்தில், மாநாட்டில் நடக்கும் நிகழ்வுகள், பேச்சாளர் குறித்த தகவல், கண்காட்சி அரங்கம் குறித்த விபரங்களை அறியலாம். அரங்குகளையும் பதிவு செய்யலாம்.
இந்நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், செயலர் அதுல் ஆனந்த், ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவன தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் பங்கேற்றனர்.