ADDED : ஆக 20, 2026 06:05 AM

ஹைதராபாதில் ஏ.ஐ., மையம்அமைத்தது 'ப்ரூப் பாயின்ட்'
ஹைதராபாதில் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு பொறியியல் மையத்தை சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'ப்ரூப் பாயின்ட்' அமைத்துள்ளது. அடுத்த 12 - 24 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட பொறியாளர்களை பணியமர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏ.ஐ., அடிப்படையிலான சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்த மையம் கவனம் செலுத்தும்.
629 சதவீதம் உயர்ந்தது'யூனிட்ரீ' பங்கு மதிப்பு
சீனாவை சேர்ந்த மனித உருவ ரோபோ தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீயின் பங்குகள் ஷாங்காய் பங்கு சந்தையில் அறிமுகமான முதல் நாளிலேயே 629 சதவீதம் உயர்ந்தன. ஐ.பி.ஓ., விலை 150.80 யுவானாக இருந்த நிலையில், 1,100 யுவானில் பங்கு வர்த்தகத்தை தொடங்கியது. சீனாவின் ரோபோட்டிக்ஸ் துறையின் வளர்ச்சியில் இது முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
ரூ.4,780 கோடி திரட்டியதுஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கி
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கி, தன் முதல் சர்வதேச பத்திர வெளியீடு வாயிலாக 4,780 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளில் முதிர்வடையும் நிலையான வட்டி விகித பத்திரங்களுக்கான வட்டி 5.625 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ் அண்டு பி., குளோபல் ரேட்டிங்ஸ் இந்த பத்திரங்களுக்கு 'பி.பி.பி.-' மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
உ.பி.,யில் 'எஸ்கார்ட்ஸ்'ரூ.2,000 கோடி முதலீடு
விவசாயம் மற்றும் கட்டுமான உபகரண தயாரிப்பு நிறுவனமான எஸ்கார்ட்ஸ் குபோட்டா, உத்தர பிரதேசத்தில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில் மேம்பாட்டு ஆணைய பகுதியில் இந்த ஆலை அமைய உள்ளது. உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.
ஹூண்டாய் கார் விலை செப்., 1 முதல் 1% உயர்கிறது
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், தனது அனைத்து மாடல்களின் விலையையும் வரும் செப்., 1 முதல் 1 சதவீதம் வரை உயர்த்த உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, செலவுகள் அதிகரிப்பு மற்றும் சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்த்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடல்கள் அடிப்படையில் விலை உயர்வு மாறுபடும்.
