ADDED : செப் 18, 2026 06:16 AM
ரூ.800 கோடியில் சிப் ஆலை; 'பியூஜிபிலிம்' அமைக்கிறது
ஜப்பானை சேர்ந்த 'பியூஜிபிலிம்' நிறுவனம், இந்தியாவில் பசுமை தள செமிகண்டக்டர் மூலப்பொருட்கள் உற்பத்தி ஆலை அமைக்க சுமார் 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் தொடக்கத்தில், செமிகண்டக்டர் தயாரிப்பின் செயல்முறைகளுக்கு தேவையான ரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படும். இரண்டாவது கட்டத்தில், மேற்பரப்பு சீரமைப்பு பொருட்கள் மற்றும் அதிக தூய்மை கொண்ட ரசாயனங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
2026 அக்டோபர் முதல் முதலீடு தொடங்கும் என்றும், வர்த்தக உற்பத்தி 2028ம் நிதியாண்டில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி சூழலை வலுப்படுத்தும் வகையில், குஜராத் தோலேரா நகரில் அமைய உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஆலையுடன் இணைந்து பியூஜிபிலிம் செயல்பட உள்ளது.
இந்தியாவில் ரூ.48,000 கோடி முதலீடு; 'அப்ளைடு மெட்டீரியல்ஸ்' அறிவிப்பு
அமெரிக்காவை சேர்ந்த செமிகண்டக்டர் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான அப்ளைடு மெட்டீரியல்ஸ், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 500 கோடி டாலர், அதாவது, கிட்டத்தட்ட 48,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
பெங்களூரில் 140 ஏக்கரில் மேம்பட்ட செமிகண்டக்டர் ஆராய்ச்சி பூங்கா அமைப்பதும் இத்திட்டத்தில் அடங்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை விரிவுபடுத்துவதுடன், இந்தியாவில் உள்ள தனது சப்ளையர் வலையமைப்பை 2035ம் ஆண்டுக்குள் பத்து மடங்கு உயர்த்தவும் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
100க்கும் மேற்பட்ட உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் வாயிலாக, சிப் உற்பத்திக்கான உபகரண வடிவமைப்பு மட்டுமின்றி, தயாரிப்பு மேம்பாடு, கொள்முதல் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு உள்ளிட்ட பணிகளிலும் இந்தியாவின் பங்கை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
'அடிடாஸ்' தொழில்நுட்ப பிரிவில் பணியிடங்கள் குறைப்பு
அடிடாஸ் நிறுவனத்தின் குருகிராம் இந்திய தொழில்நுட்ப மையத்தில் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவால் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், டேட்டா சயின்டிஸ்ட்கள் மற்றும் டேட்டா இன்ஜினியர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 700 பேர் பணியாற்றும் இந்த மையத்தில் 350க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், அடிடாஸ் நிறுவனம், இந்திய தொழில்நுட்ப பிரிவில் 20 சதவீதத்துக்கும் குறைவான பணியாளர்களே நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மாறி வரும் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப நிறுவன செயல்பாட்டு கட்டமைப்பை எளிமைப்படுத்த இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகள் மற்றும் ஆதரவு வழங்கப்படும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
