பீரங்கிக்கான லாரிகள் வாங்க ரூ.224 கோடியில் ஒப்பந்தம்
பீரங்கிக்கான லாரிகள் வாங்க ரூ.224 கோடியில் ஒப்பந்தம்
ADDED : ஆக 04, 2025 12:51 AM

பெங்களூரு,:பீரங்கிகளை எடுத்துச் செல்வதற்காக, 212 கவச லாரிகளை 224 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய, இந்திய ராணுவம், ஆக்சிஸ்கேட்ஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தில், பை என்ற பிரிவின் கீழ் இந்த கொள்முதல் இடம்பெற்றுள்ளது.
இந்த கவச லாரியில், 50 டன் எடை உள்ள பீரங்கியை சுமந்து செல்ல முடியும். குறிப்பாக, அர்ஜூன் பீரங்கி மற்றும் இதர பீரங்கிகளுக்கு இது பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதில், பீரங்கிகளை ஏற்றி இறக்க, நவீன ஹைட்ராலிக் மற்றும் நியூமேட்டிக் அம்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன. போர்க்காலங்களில், மலை, காடுகள் உள்ளிட்ட வெவ்வேறு நிலப்பரப்பு மற்றும் வானிலையிலும், பீரங்கிகளை இடம்மாற்ற ஏதுவாக, இந்த லாரி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு ஆக்சிஸ்கேட்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம், ரேடார்கள் உள்ளிட்ட இதர அமைப்புகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது.

