73% உரத்தேவையை பூர்த்தி செய்து உள்நாட்டு நிறுவனங்கள் சாதனை
73% உரத்தேவையை பூர்த்தி செய்து உள்நாட்டு நிறுவனங்கள் சாதனை
UPDATED : ஜன 11, 2026 09:09 AM
ADDED : ஜன 11, 2026 01:13 AM

புதுடில்லி: கடந்தாண்டு நாட்டின் மொத்த உரத்தேவையில் 73 சதவீதம் அளவுக்கு, உள்நாட்டு உற்பத்தி வாயிலாக பூர்த்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக, மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், அதிக இறக்குமதியை நம்பியிருந்த நிலை மாறியுள்ளது.
மேலும், அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுதும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், தொடர்ந்து மலிவு விலையில், தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு தொய்வின்றி பணியாற்றி வருகிறது. உரங்கள் பாதுகாப்பு மற்றும் உரிய நேரத்தில் கிடைப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், உலகளாவிய நிச்சயமற்ற சூழல் மற்றும் வினியோக சிக்கல்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், முக்கிய மூலப்பொருட்கள் கிடைப்பதற்கு, நீண்ட கால ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, உள்நாட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளில் உரங்கள் உற்பத்தி, தொடர்ச்சியாக, நிலையாக அதிகரித்து வருகிறது.
யூரியா, டி.ஏ.பி., - என்.பி.கே., எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட உரங்களின் மொத்த உற்பத்தி, கடந்த 2021ல் 433.29 லட்சம் டன் ஆக இருந்தது. அது 2022ல் 467.87 லட்சம் டன்னாகவும், 2023ல் இது 507.93 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டிலும் உள்நாட்டில் உரங்கள் உற்பத்தி 509.57 லட்சம் டன்னாக அதிகரித்தது.
சென்ற ஆண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு, 524.62 லட்சம் டன்னாக உள்நாட்டில் உரங்கள் உற்பத்தி அதிகரித்து இருந்தது. இந்த சாதனைக்கு, அரசின் ஆக்கப்பூர்வமான மற்றும் கொள்கை முடிவுகள் உரத்துறையை வலுப்படுத்தியதற்கு காரணம் என்பதை வெளிப்படுத்தி உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

