
பென்ஸ் கார் விலை புத்தாண்டில் உயர்கிறது
மெ ர் சிடிஸ் பென்ஸ் கார்களின் விலையை அடுத்த மாதம் 2 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. யூரோவுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் சரிவை அடுத்து, இந்த விலையேற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக குறைவதை அடுத்து, கார் உற்பத்திக்கான மூலப்பொருள் இறக்குமதி செலவுகள் அதிகரித்திருப்பதால் இம்முடிவை எடுத்திருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் சந்தோஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு நிறைவு
புதுடில்லி: இந்தியா - -அமெரிக்கா இடையே இரண்டு நாள் வர்த்தக பேச்சுகள் டிச., 11ல் நிறைவடைந்தன.
ரிக் ஸ்விட்ஸர் தலைமையிலான அமெரிக்க வர்த்தக துாதுக்குழு, இந்தியா வந்து, நம் நாட்டின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது. பரஸ்பரம் பயனளிக்கும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தின் முதல் பகுதி இறுதி செய்யப்பட உள்ள நிலையில், சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுவரை 6 சுற்று பேச்சுகள் முடிவடைந்துள்ளன.
தற்போது 17.19 லட்சம் கோடி ரூபாய்க்கு உள்ள இருதரப்பு வர்த்தகத்தை, 2030 வாக்கில் 45 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.
விமான, ட்ரோன் துறையில்2 லட்சம் வேலை வாய்ப்புகள்
இ ந்தியாவில் விமான போக்குவரத்து, ட்ரோன்கள், விண்வெளி தொழில்நுட்ப துறை 2033 வாக்கில் 3.96 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக மாறும். அதன்மூலம் பெங்களூரு, சென்னை, அகமதாபாத், புனே உள்ளிட்ட நகரங்களில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். பொறியாளர்கள், ஆய்வாளர்கள், தரவு விஞ்ஞானிகள், இதர பணியாளர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும் என்று மனித வள நிறுவனமான 'அடெக்கோ இந்தியா' வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

