எத்தனால் கலப்புதான் சிறந்த தீர்வு 'டி.வி.எஸ்., மோட்டார்' இயக்குநர் கருத்து
எத்தனால் கலப்புதான் சிறந்த தீர்வு 'டி.வி.எஸ்., மோட்டார்' இயக்குநர் கருத்து
UPDATED : ஏப் 14, 2026 11:58 PM
ADDED : ஏப் 14, 2026 11:56 PM

புதுடில்லி:மின்சார வாகனங்கள் எதிர்கால தொழில்நுட்பமாக இருந்தாலும் இறக்குமதி சார்ந்து உள்ளது, எத்தனால் கலப்பு பெட்ரோல், இந்திய சூழலுக்கு விலை குறைவான, விரைவான தீர்வாக இருக்கும் என டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுதர்ஷன் வேணு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
இ20 என்ற 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல், இ25, இ27 என அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு உந்துகோலாக உள்ளது. ஆனால், கவனமாக படிப்படியாக முன்னேற வேண்டும். மத்திய அரசு அதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
மின்சார, எத்தனால் கலப்பு பெட்ரோல் வாகனங்களை ஒப்பிட முடியாது. மின்சார வாகனங்கள் எதிர்கால தொழில்நுட்பமாக இருந்தாலும் இறக்குமதி சார்ந்து உள்ளது.
எத்தனால் கலப்பு பெட்ரோல், இந்திய சூழலுக்கு விலை குறைவான, விரைவான தீர்வாகும். இரண்டையும் பயன்படுத்த வேண்டும்.
எத்தனால் கலப்பு பெட்ரோல் பைக்கை 2019ல் அறிமுகப்படுத்தினோம். 85 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல் வாகனத்தை காட்சிப்படுத்தினோம். எத்தனால் கலப்பை அதிகரிக்கும் வகையில் இருசக்கர வாகன தொகுப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
