முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திராவில் விரைவில் துவக்கம்
முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திராவில் விரைவில் துவக்கம்
ADDED : செப் 19, 2025 01:37 AM

புதுடில்லி:ஆந்திராவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய முதல் தனியார் தங்கச்சுரங்கத்தில் முழுமையான உற்பத்தி விரைவில் துவங்க இருப்பதாக டெக்கான் கோல்டு மைன்ஸ் மேலாண் இயக்குநர் ஹனுமா பிரசாத் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் ஆண்டுதோறும் 1,000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்க்கு அடுத்ததாக, அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே தங்க சுரங்க நிறுவனமாக டெக்கான் கோல்டுமைன்ஸ் உள்ளது.
ஆந்திராவின் கர்னுால் அடுத்த ஜொன்னகிரியில் முதல் தனியார் தங்க சுரங்கம் அமைக்கும் பணியில் ஜியோமைசூர் சர்வீசஸ் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை டெக்கான் கோல்டுமைன்ஸ் வைத்துள்ளது.
இந்நிலையில், சி.ஐ.ஐ., இந்தியா மைனிங் மாநாட்டில் பங்கேற்ற டெக்கான் கோல்டு மைன்ஸ் மேலாண் இயக்குநர் ஹனுமா பிரசாத் தெரிவித்ததாவது:
கடந்த ஜூன், ஜூலையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு, மாநில அரசின் தடையின்மை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். இந்தியாவின் தங்கம் உற்பத்தி, தற்போது 1.5 டன்னாக உள்ளது. எங்கள் சுரங்கம் விரைவில் முழுமையாக செயல்பட துவங்கிய பின்னர், கூடுதலாக ஒரு டன் அளவுக்கு தங்கம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.