ADDED : பிப் 17, 2026 12:57 AM

சென்னை:துாத்துக்குடி மாவட்டத்தில், ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை விரைவாக கையாள வசதியாக, பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை பொது - தனியார் முயற்சியில் அமைக்க, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம், கூட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டின் ஏற்றுமதியில் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை விரைவாக கையாள சென்னை, கோவையில், எம்.எம்.எல்.பி., எனப்படும் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைகிறது.
இதன் வாயிலாக, இந்த மாவட்டங்களை சுற்றி செயல்படும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள், சரக்கு போக்குவரத்து பூங்காவுக்கு எடுத்து வரப்படும்.
அங்கு கிடங்கு, குளிர்ப்பதன கிடங்கு, 'பேக்கிங்' வசதி உட்பட அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகள் இடம்பெறும். எனவே, அங்கிருந்து சரக்குகள் ரயில், துறைமுகங்கள் வாயிலாக விரைவாக ஏற்றுமதி செய்யப்படும்.
தற்போது, துாத்துக்குடியில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க, கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, 'சிப்காட்' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் என, தென் மாவட்டங்களில் ஜவுளி, வாகன உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, கப்பல் கட்டும் தொழில் என, பல வகை தொழில்கள் துவங்கப்பட்டு வருகின்றன.
'எனவே, பொது - தனியார் முயற்சியின் கீழ் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை சிப்காட் நிறுவனம் அமைக்க உள்ளது' என்றார்.

