ADDED : ஜன 13, 2025 12:09 AM

நுண்கடன் துறையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதன் அடையாளமாக காலாண்டு சார்ந்த வளர்ச்சி 4.3 சதவீதம் குறைந்துள்ளது. ஆண்டு அடிப்படையிலான வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் நிகழ் நேர வாடிக்கையாளர் பரப்பு 8.9 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில், காலாண்டு அடிப்படையில் 1.1 சதவீத சரிவு கண்டுள்ளது.
முன்னணி மாநிலங்களில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த தவறியவர்கள் விகிதமும் மோசமாகி உள்ளது. ரிசர்வ் வங்கியும் தன் டிசம்பர் மாத அறிக்கையில், நுண்கடன் துறையில் லேசான நெருக்கடி இருப்பதை சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடனை திரும்பச் செலுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த நிதியாண்டின் முதல் பாதியில், வாங்கிய பணத்தை திரும்பச் செலுத்த தவறிய கடன்கள் 4.30 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இணையான காலத்தில் இது 2.15 சதவீதமாக இருந்தது.
பல்வேறு இடங்களில் இருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன் பெற்றவர்கள் மத்தியில் பணத்தை திரும்பச் செலுத்த தவறுவது அதிகமாக உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. அனைத்து விதமான கடன் அளவுக்கும் இது பொருந்துகிறது.