ADDED : பிப் 06, 2026 01:08 AM

மதுரை: கடந்தாண்டு துவக்கத்தில், குதிரைவாலி கிலோ 23 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜி.வெங்கடேஷ் தெரிவித்துள்ளதாவது:
சிறுதானியங்களில் ஒன்றான குதிரைவாலி, மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
மதுரை, திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கடந்தாண்டு ஜனவரி, -பிப்ரவரியில் 1 கிலோ குதிரைவாலி தானியம் 23 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது 50 ரூபாயாக உயர்ந்து, குவின்டால் 5,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சுற்றுவட்டார பகுதிகள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் குதிரைவாலி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவே விலை உயர்வுக்கு காரணம். பொதுவாக, வரத்து அதிகமானால் விலை குறையும். இந்த சீசனில் குதிரைவாலியின் வரத்து குறைவாக இருந்ததால், விலை உயர்ந்துள்ளது.
மற்ற சிறுதானியங்களான பனிவரகு கிலோ 50 ரூபாய்க்கும், சாமை கிலோ 48 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சிறுதானியங்கள் தேவைப்படுவோர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை அணுகலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.

