ADDED : ஆக 31, 2025 08:55 PM

சொந்த வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான கடன், உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கான சேமிப்பை பாதிக்காமல் இருப்பது அவசியம்.
வீட்டுக்கடன் பெறும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பல இருக்கின்றன. கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தினாலும், இயல்பாகவே கடன் தகுதியை அதிகரித்துக் கொள்வதையும் பலரும் விரும்புகின்றனர். கடன் தகுதி அதிகரித்தால், அதிக தொகை கடனாக கிடைக்கும்.
இதனால், விரும்பிய அளவு பெரிய வீட்டை வாங்கலாம். ஆனால், இதற்கு ஏற்ப கடனுக்கான மாதத் தவணை அதிகரிக்கும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். மாதத் தவணை சுமையாக மாறி, எதிர்கால கனவுகளை பாதிக்காமல் இருப்பது முக்கியம்.
தவணை அளவு
கடனுக்கான தவணை ஒருவ ரது மாத சம்பளத்தில், 40 சதவீதத் திற்கு மிகாமல் இருப்பது நல்லது என சொல்லப்படுகிறது. வீட்டுக்கடன் மட்டுமல்ல, எல்லா வகை கடன்களையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வருமானத்தில் பாதி அளவுக்கு கூட தவணையாக வரும் அளவுக்கு கடன் பெறலாம். ஆனால், அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடியை உணர வேண்டும். கடன் தவணை மாத சம்பளத்தின் கணிசமாக பங்கை எடுத்துக்கொள்ளுமாயின், வீட்டின் மற்ற செலவுகள் மீது தாக்கம் செலுத்தும்.
கடன் பெற்று வீடு வாங்கிய உற்சாகத்தில் முதல் சில மாதங்கள் சமாளிக்க முடிந்தாலும், அடுத்து வரும் மாதங்களில் அழுத்தத்தை உணரலாம். தவணை போக கையில் மிஞ்சும் தொகை செலவுகளுக்கு போதாமல் இருப்பதோடு, சேமிப்பையும் பாதிக்கலாம்.
எந்த செலவை செய்வதாக இருந்தாலும், கடன் தவணை பொறுப்பு மனதில் வந்து நிற்கும். மேலும், ஏதேனும் எதிர்பாராத நெருக்கடி அல்லது மருத்துவ செலவு ஏற்பட்டால் நிலைமை மோசமாகும்.
கடன் அளவு
எனவே, வீட்டுக்கடனாக இருந்தாலும் சரி, வாகன கடனாக இருந்தாலும் சரி, மாதத் தவணை எதிர்கால சுமையாக மாறாமல் இருப்பது முக்கியம். வருமானத்திற்குள் சமாளிக்கக் கூடிய அளவுக்கு மட்டுமே கடன் தவணை இருக்க வேண்டும்.
இதை தீர்மானிப்பதற்கான எளிய வழி, தவணைத் தொகை போக எஞ்சியுள்ள வருமானத்தில் சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கு போதுமானதாக இருக்க வேண்டும். 20 முதல் 30 சதவீதம் வரை சேமிப்பு இருந்தால் நல்லது என்பதால், இந்த அளவுக்கான தொகையை முதலில் எடுத்து வைத்துவிட வேண்டும்.
இதன் பிறகு உள்ள தொகையை ஊதியமாகக் கொண்டு, அதில் 40 சதவீதம் அளவுக்கு தவணை இருக்கும் வகையில் கடனை திட்டமிட வேண்டும்.
சேமிப்பையும், முதலீட்டையும் பாதிக்காத வகையில் மாதத் தவணை அமையும் என்றால், கடன் சுமையை எளிதாக நிர்வகிக்கலாம். கடன் பெறும் போது, அதிக தொகை கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் அது ஏற்றதா என யோசிக்க வேண்டும். சமாளிக்கக் கூடிய அளவுக்கு மட்டுமே கடன் பெற வேண்டும்.
அந்த தொகை குறைவாக இருக்கும் என்றால், அதற்கேற்ற வீட்டை நாட வேண்டும் அல்லது அந்த அளவுக்கு நிலைமை மேம்பட திட்டமிட வேண்டும். முக்கியமாக எதிர்பாராத நெருக்கடியை சமாளிக்க தேவையான அவசரகால தொகை கைவசம் இருக்க வேண்டும். வட்டி விகிதம் ஏறினாலும் சமாளிக்கக் கூடிய நிலை இருக்க வேண்டும்.