பஞ்சுக்கான 'லிப்டிங்' அவகாசம் குறைப்பு அறிவிப்பால் அதிர்ச்சியில் நுாற்பாலைகள்
பஞ்சுக்கான 'லிப்டிங்' அவகாசம் குறைப்பு அறிவிப்பால் அதிர்ச்சியில் நுாற்பாலைகள்
ADDED : மார் 08, 2026 02:24 AM

திருப்பூர்: 'கொள்முதல் செய்யும் பஞ்சை எடுத்துச் செல்லும் கால அவகாசத்தை குறைக்காமல், 90 நாட்களாக தொடர வேண்டும்' என, 'டாஸ்மா' சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் அமைப்பாக இயங்கும், இந்திய பருத்திக்கழகம் (சி.சி.ஐ.,), இந்திய பருத்தி விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்கிறது; விவசாயிகளிடம் இருந்து பஞ்சு வாங்கி இருப்பு வைக்கிறது.
பெரிய நிறுவனங்கள், நுாற்பாலைகள் நேரடியாக விவசாயிகளிடம் பஞ்சு கொள்முதல் செய்கின்றன. குறு,சிறு மற்றும் நடுத்தர நுாற்பாலைகள், இந்திய பருத்தி கழகம் இருப்பு வைக்கும் பஞ்சை கொள்முதல் செய்கின்றன.
முன்பதிவு செய்யும் போது, 1,000 பேல்களுக்கு (ஒரு பேல் 170 கிலோ) அதிகமாக இருந்தால், 90 நாட்களுக்குள் கொள்முதல் (லிப்டிங்) செய்து கொள்ளலாம். ஆயிரம் பேல்களுக்கு குறைவாக இருந்தால், 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. பருத்தி பஞ்சு நிர்வாக வசதிக்காக, இந்திய பருத்திக்கழகம், புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, 60 மற்றும் 90 நாட்களாக இருந்த பஞ்சு கொள்முதல் அவகாசம், 15 மற்றும் 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது, நுாற்பாலைகள் மத்தியில் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது.

