ADDED : செப் 19, 2024 03:01 AM

புதுடில்லி:நாட்டின் வைரத் தொழில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக, ஜி.டி.ஆர்.ஐ., எனும் உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் குஜராத் மாநிலம் தான் வைர வியாபாரத்தில் முன்னோடியாக திகழ்கிறது. இங்குள்ள ஆலைகள் பட்டை தீட்டாத வைரத்தை இறக்குமதி செய்து, பட்டை தீட்டி, மெருகூட்டி ஏற்றுமதி செய்வது வழக்கம். இந்நிலையில், இந்தியாவின் வைரத் தொழில் குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
இந்தியாவின் வைரத் தொழில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏற்றுமதி செய்த வைரங்கள் திருப்பி அனுப்பப்படுவது அதிகரித்துள்ளது. வைர ஏற்றுமதி ஆர்டர்கள் குறைவு, செயற்கை வைரங்களின் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவற்றால், பட்டை தீட்டாத வைரங்கள் தேக்கமடைந்துள்ளன.
இதனால், கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டு, ஆலைகள் மூடப்படுகின்றன. இதனால், அதிக வேலை இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. குஜராத்தில் மட்டும் இத்தொழிலில் ஈடுபட்டிருந்த 60க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துஉள்ளனர்.
இந்தியாவின் முக்கிய வைர ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் சூழல் உள்ளிட்ட காரணங்களால், அதன் தேவை குறைந்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, பட்டை தீட்டப்படாத வைரத்தின் வினியோகம் தடைபட்டுள்ளதும் வைரத் தொழிலை பாதித்துள்ளது.
உள்நாட்டிலும், விற்பனையாகாத மற்றும் திருப்பி அனுப்பப்படும் வைரம் அதிகரித்துள்ளதால், வைரத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டை தீட்டப்படாத வைர இறக்குமதி 24.50% சரிவு
பட்டை தீட்டப்பட்ட வைர ஏற்றுமதி 34.60% சரிவு
விற்கப்படாமல் திரும்பும் வைரம் 45.60% உயர்வு

