ADDED : பிப் 21, 2026 03:06 AM

'விவசாயம், கல்விக்கு ஏ.ஐ., பயன்படுத்துங்க'
பு துடில்லியில் நடைபெறும் ஏ.ஐ., இம்பாக்ட் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, 16 ஏ.ஐ., மற்றும் டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், நிறுவனர்களுடன் நேற்று உரையாடினார். தங்களது யோசனைகள், பணிகள் குறித்து பிரதமரிடம் அவர்கள் விளக்கினர்.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தாய்மொழியில் உயர்கல்வியை மேம்படுத்துதல் முதலியவற்றுக்கு பயன்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
மேலும், தரவு மேலாண்மையின் அவசியம் குறித்து குறிப்பிட்ட அவர், போலியான தகவல்கள் பரவல் குறித்தும் எச்சரித்தார். தவிர, நம் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப தீர்வுகள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
'ஏ.ஐ.,யால் செய்ய முடியாத விஷயம்'
பு துடில்லியில் உள்ள இங்கிலாந்து துாதரகத்தில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், அந்நாட்டின் துணை பிரதமர் டேவிட் லாமி இடையே உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு சற்று தாமதமாக வந்த ரிஷி சுனக், “நாங்கள் வர தாமதமாகிவிட்டது. அது என் தவறுதான். ஏ.ஐ., தொழில் நுட்பத்தால் செய்ய முடியாத வேலை ஏதுமில்லை. எனினும், டில்லியின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ஏ.ஐ.,யால் முடியாது,” என்று நகைச்சுவையாக கூறினார்.
ஹெச்.சி.எல்., டெக் -என்விடியா புதிய ஏ.ஐ., தளம்
ஹெ ச்.சி.எல்.,டெக் நிறுவனம், முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவுடன் இணைந்து 'விஷன் எக்ஸ் 2.0' என்ற பெயரில் ஏ.ஐ., எட்ஜ் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. தொழில்துறை நிறுவனங்களில் நிகழ் நேர நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஹெச்.சி.எல்., டெக்கின் 'இன்டெலிஜென்ட் செக்யூர் எட்ஜ்' எனும் திறன்களை அடிப்படையாக கொண்டு, இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜயகுமார் அண்மையில் பேசியபோது, 'ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் தகவல் தொழில்நுட்பத்துறை வழக்கொழிந்துவிடும் என்பது மிகைப் படுத்தப்பட்ட தகவல் ஆகும்' என்றார்.
போர்க்களத்தில் புதிய ஏ.ஐ., ரோபோ 'மியூல்'
ஏ .ஐ., இம்பாக்ட் மாநாட்டில் இந்திய பாதுகாப்புப் படைகள் சார்பில் 'மியூல்' என்ற பெயர்கொண்ட ஏ.ஐ., ரோபோ காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 'மல்டி யுடிலிட்டி லெக் எக்விப்மெண்ட்' என்பதன் சுருக்கம்தான் மியூல்.
ஆபத்து மிகுந்த நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள், கேமராக்கள், ரேடார்கள், இதர சாதனங்களை இது எடுத்துச்செல்லும். டில்லியை சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. பாதுகாப்புப் படைகள் இதனை பல்வேறுபட்ட நிலப்பரப்புகள், சூழல்களில் பயன்படுத்தி வருகின்றன.
'ஏ.ஐ., விவகாரத்தில் இந்தியா அதிர்ஷ்டசாலி'
ஏ .ஐ., தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட இளைய தலைமுறை கிடைத்தது இந்தியாவின் அதிர்ஷ்டம் என்று ஐ.எம்.எப்., அமைப்பின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
''ஏ.ஐ., தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டமைக்காகவும் அதனை ஜனநாயகப்படுத்தியமைக்காகவும் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி. இந்திய அரசு, பொதுமக்களுக்கான டிஜிட்டல் கட்டமைப்பில் முதலீடு செய்திருக்கிறது.
''இத்துறையில் தொழில் முனைவுக்கு இருந்த தடைகளை சிறப்பாக அகற்றி வருகிறீர்கள். துடிப்பு மிக்க இளைஞர்களும் இருக்கின்றனர். ஆக, எல்லாமே இருக்கிறது. வாழ்த்துகள்,” என்றார்.

