ADDED : ஜன 28, 2025 01:07 AM

சென்னை : சென்னையை தலைமையிடமாகக் கொண்ட, சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான 'ஜோஹோ'வின் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். குழுமத்தின் சி.இ.ஓ., ஆக, இணை நிறுவனர் சைலேஷ் குமார் தவே பொறுப்பேற்க உள்ளார்.
ஜோஹோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் கவனம் செலுத்த, நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்ற இருப்பதால், தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். அண்மைக் காலமாக ஏ.ஐ.,யில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்கள் உட்பட, எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தனது தனிப்பட்ட, கிராமப்புற மேம்பாடு பணிகளில் கவனம் செலுத்தவும், முழுநேர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபடவும் முடிவெடுத்துள்ளதாக கூறிய ஸ்ரீதர் வேம்பு, 'புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது' என்று சமூகவலைத் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

