ADDED : ஜூன் 03, 2025 02:12 AM

புதுடில்லி : நாட்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி, கடந்த மே மாதத்தில், மூன்று மாதங்களில் இல்லாத சரிவைக் கண்டுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து, எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளைத் திரட்டி வருகிறது.
மே மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தயாரிப்பு துறை வளர்ச்சியைக் குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஏப்ரல் மாதத்தில் 58.20 புள்ளிகளாக இருந்த நிலையில், மே மாதத்தில் 57.60 புள்ளிகள் என்ற மூன்று மாத சரிவைக் கண்டுள்ளது.
எனினும், இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியையே குறிக்கும். குறைவாக இருந்தால் சரிவைக் குறிக்கும்.
பணவீக்க அழுத்தங்கள், போட்டித்தன்மை அதிகரிப்பு மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் ஆகியவை, கடந்த மாதம் வளர்ச்சி குறைய காரணமாக அமைந்தன. இருப்பினும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை வலுவாகவே இருந்தது.
புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கிட்டத்தட்ட மூன்று ஆண்டு உச்சத்தை எட்டின. இதன் காரணமாக பணியமர்த்தல்கள் புதிய உச்சத்தை எட்டின. தற்காலிக வேலைவாய்ப்புகளை காட்டிலும், நிரந்தர பணி வாய்ப்புகள் அதிகரித்தன.
உள்ளீட்டு பொருட்களின் விலை மட்டுமல்லாது, சரக்குப் போக்குவரத்து மற்றும் பணியாளர் செலவுகளும் அதிகரித்தன. எனினும் விற்பனை விலையை உயர்த்தி, நிறுவனங்கள் லாபத்தை தக்கவைத்துக்கொண்டன.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.