தயாரிப்பு துறை வளர்ச்சி 9 மாதங்களில் இல்லாத சரிவு
தயாரிப்பு துறை வளர்ச்சி 9 மாதங்களில் இல்லாத சரிவு
ADDED : டிச 02, 2025 12:24 AM

புதுடில்லி: அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் மற்றும் விற்பனை சரிவு காரணமாக, கடந்த மாதம் நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளை சேர்ந்த 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து, எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது.
'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது.
நவம்பர் மாதத்துக்கான அதன் அறிக்கையி ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் தயாரிப்பு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த நவம்பர் மாதத்தில் 56.60 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, கடந்த அக்டோபரில் 59.20 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும்; குறைவாக இருந்தால் சரிவை குறிக்கும்.
உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் 50 சதவீத வரி, இந்திய ஏற்றுமதியை பாதித்துள்ளது.
ஆப்ரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆர்டர்கள் கிடைத்தாலும், புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்து உள்ளன.
மூலப்பொருட்களின் விலை மற்றும் விற்பனை விலை உயர்வு கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. பணியமர்த்தல்கள் தொடர்ந்து 21வது மாதமாக வளர்ச்சி கண்டிருந்தாலும், இதன் வேகம் மிகவும் குறைந்துள்ளது.
எதிர்கால கண்ணோட்டத்தை பொறுத்தவரை, சர்வதேச போட்டி மற்றும் வரி விதிப்பு குறித்த அச்சம் காரணமாக, நிறுவனங்களின் நம்பிக்கை கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

