தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் அதிகரிப்பு
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் அதிகரிப்பு
UPDATED : நவ 04, 2025 12:41 PM
ADDED : நவ 03, 2025 11:40 PM

புதுடில்லி: ஜி.எஸ்.டி., குறைப்பால் புதிய ஆர்டர்கள் உயர்வு மற்றும் அதிகரித்த தேவை காரணமாக, கடந்த மாதம் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளை சேர்ந்த 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து, எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது.
அக்டோபர் மாதத்துக்கான அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய தயாரிப்பு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த அக்டோபர் மாதத்தில் 59.20 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது, கடந்த செப்டம்பரில் 57.70 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும்; குறைவாக இருந்தால் சரிவை குறிக்கும். வலுவான தேவை காரணமாக புதிய ஆர்டர்கள், உற்பத்தி மற்றும் பணியமர்த்தல்கள் ஆகியவை அதிகரித்தன.
உள்நாட்டில் ஆர்டர்கள் வலுவாக அதிகரித்திருந்தன. வெளிநாட்டு ஆர்டர்கள் சிறிய வளர்ச்சியை பதிவு செய்தன. உள்ளீட்டு பொருட்களின் விலை சற்றே அதிகரித்த நிலையில், இதை ஈடுகட்ட உற்பத்தியாளர்கள் விற்பனை விலையை உயர்த்தினர். தொடர்ந்து 20வது மாதமாக கடந்த மாதமும் பணியமர்த்தல்கள் அதிகரித்து உள்ளன.
எதிர்கால கண்ணோட்டத்தை பொறுத்தவரை, ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களின் விளைவு மற்றும் வலுவான தேவை காரணமாக, நிறுவனங்கள் மிகுந்த நம்பிக்கையுடனேயே உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

