மினி பேட்டி: 'கட்டட இடிப்பு தொழிலுக்கு அங்கீகாரம் தேவை”'
மினி பேட்டி: 'கட்டட இடிப்பு தொழிலுக்கு அங்கீகாரம் தேவை”'
ADDED : மே 17, 2026 04:16 AM

கட்டடங்களை இடித்து அகற்றும் தொழில் துறை வளர்ச்சியடைந்து வந்தாலும், இதற்கு தொழில் துறை அந்தஸ்து இல்லாமல் இருப்பது பெரிய குறை என்று 'இந்திய கட்டட இடிப்பு சங்க' நிறுவனர் - உறுப்பினர் மோகன் ராமநாதன் கூறுகிறார். அவர் நம் இதழுக்கு அளித்த பேட்டி:
கட்டடங்களை இடித்து தரும் தொழில் துறை வளர்ந்திருக்கிறதா?
மொத்தம் 2,000 கோடி ரூபாய் தொழில் துறை இது. 10 - 15 சதவீத ஆண்டு வளர்ச்சி கண்டு வருகிறது. இதில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்குபடுத்தப்படாத சிறு நிறுவனங்கள், தனி நபர்கள்தான். அவர்களை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவர உழைத்து வருகிறோம்.
எந்த அளவுக்கு இத்துறை இயந்திரமயமாகியுள்ளது?
5 சதவீதம்தான் இயந்திரமயமாகியுள்ளது. ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பமெல்லாம் வந்திருக்கிறது என்றாலும் அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
இத்துறையில் வெளிநாடுகள் மற்றும் இந்தியா இடையே என்ன வித்தியாசம்?
வெளிநாடுகளில் ஒரு கட்டடத்தை இடித்தால், 100 சதவீதம் பொருட்களை மறுபயன்பாட்டுக்கு கொண்டு செல்வது கட்டாயம். ஆனால், நம் நாட்டில், 5 சதவீத அளவே முறைப்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள் மட்டும் இதை செய்கின்றன. மற்றவர்கள் ஆற்றங்கரையிலோ, கடற்கரையிலோ கொட்டுகின்றனர். இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து.
அரசே இவற்றை வாங்கி பயன்படுத்தலாம் இல்லையா?
ஆம். அதற்காகத்தான் கொடுங்கையூர், பெருங்குடியில் இடிபாட்டு பொருட்களை வாங்கும் கிடங்குகளை மாநகராட்சி இயக்குகிறது. நாம் கொடுக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்து விற்பனை செய்வது அவற்றின் பொறுப்பு. ஆனால், அவற்றுக்கான விற்பனை வாய்ப்பை பெறுவதில் சவால்கள் இருப்பதால், இடிபாட்டு பொருட்களை வாங்க, கிடங்குகள் தயங்குகின்றன. இதில் அரசு உடனே தலையிட வேண்டும்.
