வீட்டு பத்திரத்தை வைத்து கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
வீட்டு பத்திரத்தை வைத்து கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
UPDATED : நவ 02, 2022 09:38 PM
ADDED : நவ 02, 2022 09:29 PM

தொழிலுக்காகவோ அல்லது வேறு ஒரு மனை வாங்கவோ பணத்தட்டுப்பாடு ஏற்படும் போது, அதனை சமாளிக்க நமது சொத்துக்களை வைத்து கடன் பெறுவது எளிதான ஒன்று. இதில் மற்ற வகை கடன்களுடன் ஒப்பிடும்போது அதிக தொகை கடனாக பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. கடன் வாங்குவது பிரச்னையில்லை அதனை எந்த வகையில் பயன்படுத்துகிறோம், அதனை அடைக்கும் அளவு நிலையான வருமானம் எதிர்காலத்திலும் வருமா என பார்த்து முடிவு செய்து சிக்கல்களை தவிர்க்கும். இனி சொத்துக்களுக்கு எதிராக கடன் பெற தேவையானவற்றை பற்றி பார்ப்போம்.
வீடு, வணிக மற்றும் தொழில்துறை சொத்துக்களை கொண்டிருப்பவர்கள் திருமணம், பிள்ளைகளின் உயர்க்கல்வி, தொழில் விரிவாக்கம் போன்ற தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நோக்கங்களுக்காக அவற்றை பயன்படுத்தி கடன் பெறலாம். கடன் வாங்குபவரின் வருமானம், முந்தைய கடன் வரலாறு மற்றும் சொத்தின் தற்போதைய மதிப்பு ஆகிய தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறும் போது கவனிக்க வேண்டியவைகளின் பட்டியல் இதோ.
எளிதில் திருப்பிச் செலுத்தக் கூடிய தொகை
![]() |
வட்டி விகிதங்களை ஒப்பிடுங்கள்
சொத்துக்களுக்கு எதிரான கடனுக்கு 9 முதல் 18 சதவீதம் வரை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை பொறுத்து வட்டி மாறுபடும். விண்ணப்பதாரரின் ரிஸ்க் புரொபைல், மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் வட்டி விகிதங்கள் மாறும். நான்கு நிறுவனங்கள் ஏறி இறங்கும் போது சிறந்ததைத் தீர்மானிக்க முடியும்.
பிராசசிங் கட்டணத்தில் கண் வையுங்கள்
பெரும்பாலான கடன் வழங்கும் நிறுவனங்கள் 1 சதவீதத்தை பிராசசிங் கட்டணம் என வசூலிக்கின்றனர். அவர்கள் இந்த கட்டணங்களை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரம்பிற்குள் வைத்திருப்பார்கள். கடன் வாங்குபவர்கள் இந்த விவரங்களைச் சரிபார்த்து, சரியான பிராசசிங் கட்டணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுத் துறை வங்கிகளில் இந்த கட்டணமானது ஒப்பிடுகையில் குறைவு. ஆனால் அங்கு வேலை நடப்பது சிரமம்.
திருப்பிச் செலுத்தும் கால அளவு
சொத்துக்களுக்கு எதிரான கடனுக்கு பொதுவாக 15 ஆண்டு கால அளவிற்கு ஈஎம்ஐ., செலுத்தும் வசதியை வங்கிகள், நிதி நிறுவனங்கள் அளிக்கின்றன. குறுகிய கால கடன் வாங்கும் போது ஈஎம்ஐ., தொகை அதிகமாக இருக்கும். ஆனால் நாம் ஒட்டுமொத்தமாக தந்த வட்டிப் பணம் குறைவாக இருக்கும். அதிகக் காலத்திற்கு கடன் எடுத்தால் ஈஎம்ஐ., குறைவாக இருக்கும் நாம் செலுத்திய வட்டி வாங்கி கடன் தொகைக்கு இணையானதாக இருக்கும்.
நேரம் எடுக்கும்
சொத்துக்களுக்கு எதிராக தரும் கடன் பெர்சனல் கடன் போன்று உடனே வழங்கப்படுவதில்லை. கடன் வாங்குபவரின் கடன் தகுதி, சொத்தின் மதிப்பீடு சரியா என்றெல்லாம் அலசி ஆராய்வர். இதற்கு வங்கியைப் பொறுத்து சில வாரங்கள், மாதங்கள் கூட ஆகும். அதற்கேற்ப நீங்கள் திட்டமிட வேண்டும்.
சொத்து மதிப்பைக் கண்டறிதல்
பொதுவாக தனியார் வங்கிகள் சொத்து மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் வழங்குவார்கள். பொதுத்துறை வங்கிகள் சொத்து மதிப்பில் 65 சதவீதம் வரை மட்டுமே கடன் கொடுப்பார்கள். எனவே உங்கள் சொத்து மதிப்பை அறிந்து வைத்து அதற்கேற்ப திட்டமிடல் அவசியம்.
கவனத்துடன் செயல்படுங்கள்
வட்டி விகிதங்கள் மற்றும் விதிமுறைகள் கடன் வழங்குபவர்களிடையே வேறுபடலாம் என்பதால் கவனமுடன் செயல்படுங்கள். ஏனென்றால் அது ஈஎம்ஐ., மற்றும் மொத்த திருப்பிச் செலுத்தும் தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும். கடன் வழங்கும் வங்கிகள் கடைப்பிடிக்கும் அனைத்து வரையறைகளையும் ஒப்பிடுவது அவசியம். டிஜிட்டல் உலகில் நம்பகமான வங்கிகள் தங்கள் வலைத்தளங்களில் வட்டி விகிதம் மற்றும் பிற விதிமுறைகளைக் குறிப்பிடுகின்றனர். அங்கு விதிமுறைகளை ஒப்பிட்டு, பின்னர் முடிவு செய்யவும்.
ப்ரீபேமென்ட் மற்றும் மறைமுக கட்டணங்கள்
சொத்துக்களுக்கு எதிரான கடன் என்பது பெரிய தொகையாக இருக்கும். எனவே அதிக பிராசசிங் கட்டணம், மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டணங்கள் மொத்த கடன் அளவை அதிகரிக்கும். அதே போல் கடனை முன்கூட்டியே செலுத்தினால் வசூலிக்கப்படும் கட்டணங்களைச் சரிபார்க்கவும். கடன் வாங்கும் வங்கியை அல்லது நிதி நிறுவனத்தை முடிவு செய்வதற்கு முன் இதுபோன்ற விஷயங்களை கவனித்தால் இழப்பு ஏதும் ஏற்படாது.

