'இந்தியாவில் தொழில் வளர்ப்பகங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை'
'இந்தியாவில் தொழில் வளர்ப்பகங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை'
ADDED : அக் 07, 2024 12:32 AM

புதுடில்லி:புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு உதவும் இன்குபேட்டர் எனும் தொழில் வளர்ப்பகங்கள், நம்நாட்டில் 10 லட்சம் நிறுவனங்களுக்கு ஒன்று என்ற அளவில் கூட இல்லை என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில், அவற்றுக்கு வழிகாட்டவும் முதலீட்டாளர்களை பெற்றுத் தரவும் உதவும் பணியை இன்குபேட்டர் அமைப்புகள் செய்யும்.
நம்நாட்டில் புத்தொழில் துவங்கும் சூழல் வேகமாக மேம்பட்டு வரும் சூழலிலும், 8.20 சதவீத புத்தொழில்கள் மட்டுமே இன்குபேட்டர் அமைப்புகளின் உதவியை பெறுகின்றன. அதேபோல், நாட்டின் 10 சதவீத இன்குபேட்டர் அமைப்புகள், 98 சதவீத புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர்களுக்கு உதவி செய்வதும் ஐ.ஐ.டி., சென்னை, ஐ.ஐ.எம்., பெங்களூரு ஆகிய உயர்கல்வி நிறுவனங்களின் ஆய்வுப் பிரிவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவில் 10 லட்சம் புத்தொழில்களுக்கு 8 முதல் 10 இன்கு
பேட்டர்கள் செயல்படும் நிலையில், இந்தியாவில் அது ஒன்றுக்கும் குறைவாக, அதாவது 0.80 என்ற அளவிலேயே இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிலும், நம்நாட்டில் மொத்தமுள்ள இன்குபேட்டர்களில் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு 45 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கிட்டத் தட்ட 1,100 இன்குபேட்டர்கள் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.இன்குபேட்டர் வழிகாட்டலில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்கள், அதன் உதவி இல்லாமல் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களை விட, இரண்டரை மடங்கு அதிகமாக முதலீடுகளைப் பெறுவதாக, சென்னை ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர் தில்லை ராஜன் தெரிவித்தார்.

