ADDED : டிச 10, 2024 07:32 AM

மும்பை: தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ., புதிய பங்கு வெளியிட தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க 'செபி'க்கு உத்தரவிடக் கோரி, வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ., வெளியிட அனுமதி கேட்ட என்.எஸ்.இ.,யின் விண்ணப்பத்தை செபி தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது.
கடந்த ஆகஸ்டில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின், மீண்டும் என்.எஸ்.இ., தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது இந்த மாதம் 3ம் தேதி பரிசீலனை நடந்தது. எனினும், அடுத்தகட்ட நடவடிக்கை மார்ச் 2025க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் 'பீப்பிள்ஸ் ஆக்டிவிசம் போரம்' என்ற அமைப்பு, வழக்கு தொடர்ந்துள்ளது.
புதிய பங்கு வெளியிட அனுமதி கோரும் நிறுவனங்கள் செபி அனுமதியை விரைவாகப் பெற்று ஐ.பி.ஓ., வெளியிட்டு வரும் நிலையில், ஒரு பங்குச் சந்தை மட்டும் புதிய பங்கு வெளியிட தாமதம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

