தொழில் முனைவோராக மாற நலிந்த பிரிவினருக்கு வாய்ப்பு
தொழில் முனைவோராக மாற நலிந்த பிரிவினருக்கு வாய்ப்பு
UPDATED : ஜன 13, 2024 11:58 AM
ADDED : ஜன 09, 2024 11:53 AM
சென்னை : நலிந்த பிரிவினரும் தொழில் முனைவோராக சிறந்த சூழல் உள்ளதாக, இளம் தொழில் முனைவோர்கள் தெரிவித்தனர்.தமிழக அரசு சார்பில் நடந்த, உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில், இளம் தொழில் முனைவோர்கள் பங்கேற்ற கருத்தரங்கு, தொழில் முனைவோருக்கான ஆலோசகர் நாக பிரகாசம் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற ஐ.டி., துறையில் பணியாற்றிய இன்ஜினியர் அர்ச்சனா ஸ்டாலின், அந்த பணியை விட்டுவிட்டு, இயற்கை விவசாயம் செய்கிறார். 280 கிராமங்களில் உள்ள விவசாயிகள் இவரது திட்டத்தில், இயற்கை விவசாயம் செய்கின்றனர்.
மதுரையை சேர்ந்த திருநங்கை பிரியா பாபு, 'டிரான்ஸ் பப்ளிகேஷன்ஸ்' என்ற பதிப்பகம் நடத்துகிறார். மேலும், திருநங்கைகள் சார்ந்த புத்தகங்களை வெளியிட்டு உள்ளார். கோவையை சேர்ந்த, ஸ்வர்ணலா என்ற மாற்றுத்திறனாளி இளம் பெண், பல்வகை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இவர், மாற்றுத் திறன் மிக்கவர்களுக்கு வழிகாட்டும் நிறுவனம் நடத்துகிறார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வாகன நிறுவனத்தையும் நடத்துகிறார்.சிறுவடிவேல் என்ற சத்தியமங்கலத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர், காட்டில் வளரும் களைச்செடிகளை பயன்படுத்தி, கைவினை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்துகிறார். சிலம்பரசன் ராமகிருஷ்ணன் என்பவர், பழுதான வாகனங்களை மீட்டு செல்லும் வாகனங்களுக்கான நிறுவனம் நடத்துகிறார்.
இவர்கள் கருத்தரங்கில் பேசியதாவது:தொழில் முனைவோராக வருவதற்கு அச்சப்படக் கூடாது. நமக்கு இருக்கும் பலவீனத்தையே, பலமாக மாற்ற யோசிக்க வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான நிறுவனங்களை துவங்க வேண்டும். தொழில் முனைவோராவதற்கு, 'ஸ்டார்ட் அப் டி.என்.,' என்ற தமிழக அரசின் நிறுவனம் வழியே, வழிகாட்டுதலும், மானியமும் கிடைக்கிறது.சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்கள், தங்களின் சொந்த ஊர்களில் இருந்தவாறே சுய தொழில் செய்வதற்கு, சிறந்த வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் இளம் தொழில் முனைவோர் உருவாக மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது. இதனை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிகழ்வில், ஆதி திராவிட இளைஞர்களுக்கு சுயதொழிலுக்கு வழிகாட்டும் 'தலித் சேம்பர் ஆப் காமர்ஸ்' நிறுவனத்தின் தலைவர் மிலின்ட் காம்ப்ளே பங்கேற்று, மத்திய அரசின் ஆதிதிராவிட இளைஞர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு கள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.தொழில் முனைவோருக்கு சிறந்த எதிர்காலம் ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்து, அமெரிக்காவின் பெர்க்லி கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் சாலமன் டார்வின் விளக்கினார். கிராமங்களை வலுப்படுத்தினால், இந்தியா வளரும் என்ற அடிப்படையில், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்க வேண்டும் என, பேசினார்.