நிலக்கடலை கிலோ 30 ரூபாய் உயர்வு கடலை மிட்டாய் விலையும் அதிகரிப்பு
நிலக்கடலை கிலோ 30 ரூபாய் உயர்வு கடலை மிட்டாய் விலையும் அதிகரிப்பு
ADDED : பிப் 12, 2026 01:28 AM

மதுரை : நிலக்கடலை கொள்முதல் விலை ஒரு கிலோ 110 ரூபாயில் இருந்து 140 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை, திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் ஜி.வெங்கடேஷ் கூறியதாவது:
''கடந்த மாதம் ஒரு கிலோ நிலக்கடலை 100 - -110 ரூபாய் என கொள்முதலான நிலையில், இந்த மாதம் 30 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு குவின்டால் நிலக்கடலை 14,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
எண்ணெய் எடுப்பதற்கு வாங்கப்படும் நிலக்கடலை ஒரு கிலோ 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது; இது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்,'' என்றார்.
கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்க செயற்குழு உறுப்பினர் கண்ணன் கூறுகையில், ''இந்தாண்டு போதுமான நிலக்கடலை விளைச்சல் இல்லை. தற்போது ஒரு கிலோ நிலக்கடலையை 170 ரூபாய்க்கு வியாபாரிகளிடம் வாங்குகிறோம். ஆட்கள் கூலி, வெல்லம் என செலவினங்கள் அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ கடலை மிட்டாய் மொத்த விலை 170 ரூபாயில் இருந்து 220 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
''சாதா கடலை மிட்டாய் ஒரு கிலோ 150 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியங்கள் அதிகரித்தால் கடலை மிட்டாய் தயாரிப்புக்கு தேவையான நிலக்கடலை குறைந்த விலையில் கிடைக்கும்,'' என்றார்.

