பி.எப்., வட்டி குறையாமல் தவிர்க்க தனி நிதி ஒதுக்கீடு? சந்தை சரிவின்போது சரிகட்ட திட்டம்
பி.எப்., வட்டி குறையாமல் தவிர்க்க தனி நிதி ஒதுக்கீடு? சந்தை சரிவின்போது சரிகட்ட திட்டம்
ADDED : பிப் 18, 2025 09:37 AM

புதுடில்லி:
பி.எப்., சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டி மாறாமல் தொடரச் செய்வதற்காக, தனி நிதியை ஏற்படுத்த இ.பி.எப்.ஓ., அமைப்பு திட்டமிட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப்., கணக்கை கிட்டத்தட்ட 6.50 கோடி தொழிலாளர்கள் வைத்துள்ளனர்.
அவர்களுக்கு நிதிச் சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப, ஆண்டுதோறும் இ.பி.எப்.ஓ., வட்டியை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது.
கடந்த 2023-24ம் நிதி ஆண்டுக்கு 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்ட நிலையில், 2024-25ம் நிதியாண்டிலும் அது நீடிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், வட்டி நிலைத்தன்மைக்கான நிதித் தொகுப்பை ஏற்படுத்த, பி.எப்., அமைப்பு திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதிச் சந்தையில் டிபாசிட் வட்டி விகிதம் குறையும் போதிலும், இந்த நிதியில் இருந்து அந்த இழப்பை ஈடு செய்து, வட்டியை குறைப்பதை தவிர்க்க இது உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, இ.பி.எப்.ஓ.,வின் முக்கிய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
சந்தையின் ஏற்றத் தாழ்வுகளால் வட்டி குறைக்கப்படாமல் தவிர்க்கவும், வட்டியை அதிகரிக்கவும் இது உதவும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால், தொழிலாளர்கள் சேமிக்கும் வருங்கால வைப்பு நிதியில், கூடுதல் தொகை சேர வழியேற்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த புதிய விதிமுறை 2026-27 நிதியாண்டில் இருந்து அமலுக்கு வரக்கூடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
பி.எப்., சந்தாதாரர்களாக 6.50 கோடி தொழிலாளர்கள்
இ.பி.எப்.ஓ., வட்டி நிர்ணய கூட்டம் பிப்.,28ல் நடக்கவுள்ளது
2023-24ல் பி.எப்., தொகைக்கு 8.25% வட்டி தரப்பட்டது
2024-25க்கும் 8.25% வட்டி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது

