பிரதமரின் தொழில் பயிற்சி திட்டம்; வாய்ப்பளித்ததில் தமிழகம் முதலிடம்
பிரதமரின் தொழில் பயிற்சி திட்டம்; வாய்ப்பளித்ததில் தமிழகம் முதலிடம்
UPDATED : மே 20, 2025 09:34 AM
ADDED : மே 20, 2025 06:42 AM

புதுடில்லி : பிரதமரின் தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ், அதிக எண்ணிக்கையில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் மாநிலங்களில், தமிழகம் முதலிடம் பிடித்துஉள்ளது.
கடந்த பட்ஜெட் தாக்கலின் போது, பிரதமரின் தொழில் பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் 21 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்கு, முன்னணி நிறுவனங்களில் 12 மாதங்கள் தொழில் பயிற்சியுடன், மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகை, மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை 6,000 ரூபாய் வழங்கப்படும்.
![]() |
இத்திட்டத்தின் வாயிலாக, திறமையான இளைஞர்களைக் கண்டறிந்து, தகுதியான வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியும் என, மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இதற்கான முதல் சுற்று விண்ணப்பப் பதிவு, கடந்தாண்டு அக்.,3ம் தேதி துவங்கி முடிவடைந்தது.
இரண்டாவது சுற்று விண்ணப்பப் பதிவில், 735 மாவட்டங்களில் உள்ள 327 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 1.19 லட்சம் தொழில் பயிற்சி வாய்ப்புகளை வழங்கின.
வாகனத் தயாரிப்பு, சுற்றுலா, வங்கி, நிதி, உற்பத்தி, நுகர்பொருட்கள் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு கல்வித்தகுதியை கொண்ட இளைஞர்களுக்கு நிறுவனங்கள் வாய்ப்புகளை வழங்கி இருந்தன.
இந்நிலையில், பிரதமர் தொழில் பயிற்சி திட்டத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தரவுகளின்படி, மொத்த தொழில் பயிற்சி வாய்ப்புகள் அளித்த மாநிலங்களில், 13.25 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதல் இடத்தை பிடித்து உள்ளது.
மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்து உள்ளன.