ADDED : பிப் 09, 2026 02:30 AM

புனே: துவரம், உளுந்து ஆகிய பருப்பு வகைகளின் விலை உயர்ந்துள்ளதாக இந்திய பருப்பு மற்றும் தானிய சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கம் தெரிவித்துள்ளதாவது: நம் நாட்டில் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் துவரம் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது. அதேநேரம் ரூபாய் மதிப்பு மீதான அழுத்தம் மற்றும் சப்ளை காரணமாக இதன் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் கடலை பருப்பு விலை 9 சதவீதமும், உளுந்து விலை 11 சதவீதமும் கடந்த ஜனவரியில் உயர்ந்துள்ளது.
ஓராண்டுக்கு பின், துவரம் பருப்பு மற்றும் உளுந்து விலை எம்.எஸ்.பி.,யைவிட உயர்ந்துள்ளது. கடலை பருப்பு விலை எம்.எஸ்.பி.,க்கு கீழ் உள்ளது. நீண்ட மழை காரணமாக காரிப் மற்றும் ரபி பருவ பருப்பு அறுவடையும் தாமதமாகியுள்ளது.
இதனால் துவரம் பருப்பு, கடலை பருப்பு விலை உயர்வு குறைந்த காலத்துக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024 ஜனவரியில் இறக்கம் கண்ட பருப்பு ரகங்களின் விலை, தற்போதுதான் உயர தொடங்கியுள்ளது.
பருப்பு ஆலைகளின் தரவுபடி, உயர் தர துவரம் பருப்பு விலை முந்தைய மாதத்தில் 1 கிலோ 105 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த ஜனவரியில் 129 ரூபாயாக உயர்ந்துள்ளது. உளுந்து விலை ஒரு கிலோ 82 ரூபாயாகவும், சன்னா விலை கிலோ 68 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

