ADDED : மார் 20, 2025 11:48 PM

புதுடில்லி:ஓலா நிறுவனத்தின் மீதான ஒழுங்குமுறை சோதனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிறுவனம் பல விற்பனை நிலையங்களுக்கு வர்த்தக சான்றிதழ் பெறாத காரணத்தால், நாடு முழுதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது வாகன விற்பனைக்கும், வாகன பதிவுக்கும் இடையே வித்தியாசங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விளக்கமளிக்கக் கோரி, நிறுவனத்துக்கு விரைவில் இரண்டாவது நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக, மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 25,000 வாகனங்களை விற்பனை செய்ததாக ஓலா நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வாகன பதிவுகளை பிரதிபலிக்கும் 'வாஹன்' போர்ட்டலில், 8,600 ஓலா இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து, சில நாட்களுக்கு முன் மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம், ஓலாவிடம் விளக்கம் கேட்டது. இதற்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையில், விரைவில் இரண்டாவது நோட்டீஸ் அனுப்பப்பட இருக்கிறது.