ADDED : மே 13, 2026 05:30 AM

புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள வர்த்தக நிச்சயமற்ற சூழ்நிலையை சமாளிக்க, சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சரக்கு கட்டணத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு இந்திய எண்ணெய் பிரித்தெடுப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
இதுகுறித்து அச்சங்கம் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மேற்காசிய போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய கமாடிட்டி சந்தைகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள இந்திய சமையல் எண்ணெய் துறை, விலை ஏற்ற இறக்கம், போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் வினியோக செலவு அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகி றது.
இதனை கருத்தில் கொண்டு, சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் துறைக்கு ஆதரவாக அரசு உடனடியாக கொள்கை வகுக்க வேண்டும். குறிப்பாக, சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சரக்கு கட்டணத்திற்கு மானியம் வழங்க வேண்டும். மேலும், கச்சா சமையல் எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களுக்கு துறைமுகங்களில் முன்னுரிமை அடிப்படையில் நிறுத்துமிட வசதி வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், பிண்ணாக்கு உள்ளிட்ட வேளாண் பொருட்களின் ஏற்றுமதிக்கு அதிக ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பிண்ணாக்கு ஏற்றுமதிக்கான கடன்களுக்கு 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
