ADDED : ஆக 01, 2025 02:38 AM

சியோல், ஆக. 1--
சீனாவுக்கு மேம்பட்ட சிப் விற்பனை செய்ய அமெரிக்கா விதித்த தடை, செயற்கை நுண்ணறிவு சிப் விற்பனை சரிவு ஆகியவை காரணமாக, நடப்பாண்டின் ஜூன் காலாண்டில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் லாபம் 55 சதவீத சரிவை கண்டுள்ளது.
தென்கொரியாவின் சியோலை தலைமையிடமாக கொண்ட சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், நுகர்வோர், மொபைல் மற்றும் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
உலகின் மிகப்பெரிய சிப் உற்பத்தி நிறுவனமாகவும் திகழ்ந்து வரும் இந்நிறுவனம், கடந்த ஏப்ரல் -- ஜூன் காலாண்டில், 28,700 கோடி ரூபாயை லாபமாக ஈட்டி உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தோடு ஒப்பிடுகையில் லாபம், 55 சதவீதம் சரிவை கண்டுள்ளது. அதே சமயம், மொத்த வருவாய் 0.70 சதவீதம் அதிகரித்து உள்ளது.
சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்திடம் இருந்து 1.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிப் வினியோகம் செய்வதற்கு ஆர்டர்களை பெற்றிருப்பதாக, சாம்சங் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.