'செக்யூரின்' நிறுவன அலுவலகம் சென்னை தரமணியில் துவக்கம்
'செக்யூரின்' நிறுவன அலுவலகம் சென்னை தரமணியில் துவக்கம்
ADDED : ஜன 08, 2026 01:09 AM

சென்னை, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செக்யூரின் நிறுவனம், 'சைபர்' பாதுகாப்பு துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அச்சுறுத்தல் கண்டறிதல், முன்னுரிமை அளித்தல், சரிசெய்தல் ஆகியவற்றுக்கு, ஏ.ஐ., தொழில் நுட்பம் பயன்படுத்துகிறது.
சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி., சென்னை ஆராய்ச்சி பூங்காவில், செக்யூரின் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தை, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா நேற்று முன்தினம் துவக்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவரது 'எக்ஸ்' தள பதிவு:
ஐ.ஐ.டி., சென்னை ஆராய்ச்சி பூங்காவில் செக்யூரின் மையத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. அந்நிறுவனம், கடந்த 2025 நவம்பரில் கோவையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், 427 கோடி ரூபாய் முதலீட்டில், 300 உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இரண்டு மாதங்களில் அதன் மையத்தை திறந்து வைக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களில் ஈடுபட்டுள்ள கே.எல்.ஏ., நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்துள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், புத்தாக்க மையத்தை, சென்னை தரமணி டி.எல்.எப்., டவுன் டவுனில், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது நேற்று துவக்கி வைத்தார்.

