ADDED : ஜன 07, 2026 01:01 AM

புதுடில்லி: இந்திய சேவை துறை நிறுவனங்களின் வளர்ச்சி, கடந்த டிசம்பர் மாதத்தில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
புதிய ஆர்டர்களின் வரத்து மற்றும் உற்பத்தி வேகம் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேவை துறை வளர்ச்சியை குறிக்கும் எச்.எஸ்.பி.சி., இந்தியா பி.எம்.ஐ., குறியீடு, கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 59.80 புள்ளிகளாக இருந்தது. இது டிசம்பரில் 58 புள்ளிகளாக குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்துக்கு பின் இதுவே மிக குறைந்த வளர்ச்சி புள்ளிகளாகும்.
இந்த குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியையும், குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும்.
அந்த வகையில் சேவை துறை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே பயணிக்கிறது, ஆனால் அதன் வேகம் குறைந்துள்ளது. இதனால், நிறுவனங்கள் புதிய பணியாளர்களை பணியமர்த்துவதை தவிர்த்துள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு மற்றும் சேவை துறைகளை உள்ளடக்கிய கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, கடந்த டிசம்பரில் 57.80 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது முந்தைய நவம்பர் மாதத்தில் 59.70 புள்ளிகளாக இருந்தது

