ADDED : நவ 07, 2025 01:46 AM

புதுடில்லி: நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி அதிகரிப்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் கனமழை காரணமாக, சேவைகள் துறை வளர்ச்சி கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எச்.எஸ்.பி.சி.,யின் சேவைகள் துறை, பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பர் மாதத்தில் 60.90 புள்ளிகளாக இருந்த சேவைகள் துறை உற்பத்தி வளர்ச்சி, அக்டோபரில் 58.90 புள்ளிகளாக குறைந்துள்ளது. கடந்த மே மாதத்துக்கு பின் இதுவே மிகக்குறைந்த வளர்ச்சியாகும். இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், வளர்ச்சியையும்; குறைவாக இருந்தால், சரிவையும் குறிக்கும்.
போட்டி அதிகரித்துள்ளதும், நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையும் உற்பத்தி குறைய காரணம் என நிறுவனங்கள் தெரிவித்தன. சர்வதேச அளவில் இந்திய சேவை நிறுவனங்களுக்கான தேவை கடந்த மாதம் மேலும் அதிகரித்தது. ஜி.எஸ்.டி., குறைப்பால், உள்ளீட்டு பொருட்களின் விலையும், விற்பனை விலையும் சிறிய உயர்வையே கண்டன.
எதிர்கால கண்ணோட்டம் குறித்து நம்பிக்கையாக உள்ள காரணத்தால், கடந்த அக்டோபரில் பணியமர்த்தல்கள் அதிகரித்துள்ளன.
இதனிடையே, தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் கூட்டு வளர்ச்சியை குறிக்கும் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதம் 60.40 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது கடந்த செப்டம்பரில், 61 புள்ளிகளாக இருந்தது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

