ADDED : மே 06, 2025 11:14 PM

புதுடில்லி:புதிய ஆர்டர்கள் அதிகரித்ததன் காரணமாக, நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த மாதம் சற்றே அதிகரித்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கியின் பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.எஸ்.பி.சி., வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, மாதந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா நிறுவனம் இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது.
ஏப்ரல் மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு கடந்த மார்ச் மாதத்தில் 58.50 புள்ளிகளாக இருந்த நிலையில், ஏப்ரலில் 58.70 புள்ளிகளாக சற்றே அதிகரித்துள்ளது.
இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும்; குறைவாக இருந்தால் சரிவை குறிக்கும்.
புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கடந்தாண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு கடந்த மாதம் மிக வேகமாக அதிகரித்துள்ளது. ஆசிய, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளிலும், குறிப்பாக அமெரிக்காவிலும் இந்திய சேவைத் துறை நிறுவனங்களுக்கான தேவை வலுவாக இருந்தது. இதன் காரணமாக நிறுவனங்களின் பணியமர்த்தல்கள் தொடர்ந்து 35வது மாதமாக கடந்த மாதமும் அதிகரித்தது. நிறுவனங்களின் செலவு அதிகரித்த போதிலும், விற்பனை விலையை உயர்த்தி நல்ல லாபம் ஈட்டின.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.