ADDED : பிப் 06, 2024 10:39 AM

புதுடில்லி: நாட்டின் சேவைகள் துறை உற்பத்தி குறியீடு, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜனவரி மாதத்தில் 61.80 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. வலுவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகள் மற்றும் புதிய வர்த்தக அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த உச்சம் எட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
'எஸ்., அண்டு பி., குளோபல் இந்தியா' நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள தாவது:
கடந்த ஜனவரி மாதத்தில், 400க்கும் மேற்பட்ட சேவைத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்திய சேவைகள் துறை, கடந்த ஆறு மாதங்களில் வேகமாக வளார்ச்சியடைந்துள்ளதை காண முடிகிறது.
சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், எஸ்., அண்டு பி.,யின் 'பி.எம்.ஐ.,' குறியீடு, ஜனவரி மாதத்தில் 61.80 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மாதமான டிசம்பரில் வளர்ச்சி 59.00 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.
புதிய வணிகங்கள் வேகமாக விரிவடைந்ததும், வருங்கால செயல்பாடுகள் குறித்த நிறுவனங்களின் எதிர்பார்ப்பு வலுவாக இருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இந்தியாவின் சேவைகள் துறை ஏற்றுமதி வலுவாக இருப்பதற்கு சான்றாக, புதிய ஏற்றுமதி வணிகக் குறியீடும் அதிகரித்துஉள்ளது.
ஏற்றுமதி விற்பனை, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜனவரியில் வேகமாக அதிகரித்தது. மேலும், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பா, ஐக்கிய அரபு எமீரகம் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்துள்ளதாக, சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குனர்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இந்தியாவின் தனியார் துறை உற்பத்தி மேலும் வளர்ந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவைகளின் ஒருங்கிணைந்த குறியீடு, கடந்த டிசம்பரில் 58.50 புள்ளிகளாக இருந்த நிலையில், ஜனவரியில் 61.20 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.