ADDED : ஜன 29, 2025 11:23 PM

சென்னை:தொழில்முனைவோரிடம் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தொழிற்பேட்டைகளின் மனைகளை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் முடிவை, 'சிட்கோ' நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டைகளை, 'சிட்கோ' எனப்படும் தமிழக அரசின் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது.
தொழிற்பேட்டையில் உள்ள மனைகளை ஒதுக்கீடு செய்வதற்கு, தொழில்முனைவோரிடம் இருந்து விண்ணப்பம் பெற்று, அதை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஒரே மனைக்கு பலர் விண்ணப்பம் செய்திருந்தால், அனைவர் முன்னிலையிலும் வெளிப்படையாக குலுக்கல் முறை பின்பற்றப்பட்டு, அதில் தேர்வாகும் நபருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்நிலையில், நிதித்துறை பரிந்துரையின் பேரில், ஒரு தொழிற்பேட்டையின் மொத்த மனைகளில் 80 சதவீதம் பழைய முறையிலும், 20 சதவீதம் ஏல முறையிலும் ஒதுக்கீடு செய்ய, சிட்கோ முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, அதன் இயக்குனர் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட இருந்தது.
'ஏல முறையை பின்பற்றினால், அதிக தொகையை கேட்பவருக்கு தான் மனை கிடைக்கும்; பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் பயன்பெற முடியும்.
'தற்போது சிட்கோ வழங்கும் மனையின் விலை அதிகமாக தான் உள்ளது; ஏல முறை என்பது சிறு தொழில்களுக்காக செயல்படும் சிட்கோவின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது' என, தொழில்முனைவோர் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், சிட்கோ இயக்குனர்கள் குழு கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் தொழிற்பேட்டை மனைகளை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் முடிவை சிட்கோ ஒத்திவைத்துள்ளது.

