ADDED : மே 25, 2026 07:32 AM
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு மையத்தை அமைப்பதற்கான முதல் கட்ட பணிகளை தொழில் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, விருதுநகர் மாவட்டத்தில், உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவர்கள், தொழில் நிறுவனங்கள் பயன்பெற ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டு மையம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாட்டில், பட்டாசு உற்பத்தியில் சிவகாசி முன்னணியில் உள்ளது. அச்சு தொழில், ஜவுளி, உணவு பொருட்கள் உற்பத்தி ஆகிய தொழில்கள், விருதுநகரில் அதிகம் உள்ளன.
அங்கு எந்தெந்த தொழில்களுக்கு திறன் மேம்பாட்டு மையம் தேவைப்படுகிறது, அவை எங்கு அமைக்கப்பட வேண்டும், எத்தனை பேர் பயனடைவர் என ஆய்வு செய்யப்பட உள்ளது. முதல் கட்ட விபரங்களை சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன” என்றார்.
ஏற்கனவே, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை பணியாளர்களின் திறன்களை மேம்படுத்த, சூளகிரி தொழில் பூங்காவில், 80 கோடி ரூபாயில் உலகத்தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு மையத்தை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைத்து வருகிறது.
