ADDED : பிப் 11, 2026 01:30 AM

சென்னை: இந்தியாவின் மின்னணு பொருள் தயாரிப்பு மற்றும் வினியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில், 'சோர்ஸ் இந்தியா 2026' என்ற மாநாடு சென்னையில் நேற்று துவங்கியது.
'எல்சினா'எனும் இந்திய மின்னணு தொழில்துறை சங்கம் சார்பாக, 'சோர்ஸ் இந்தியா - எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின்' நிகழ்வின் 12வது பதிப்பு சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவங்கி இன்று வரை நடக்கிறது.
மின்னணு பொருள் உற்பத்தியை அதிகரித்தல், தளவாடங்களை மேம்படுத்துதல், பங்குதாரர்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைசார் நிபுணர்கள் இதில் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழக மின்னணு தொழில் துறையின் நிலை மற்றும் அதன் ஏற்றுமதி வளர்ச்சி குறித்த சிறப்பு அறிக்கையை 'எல்சினா' வெளியிட்டது.
அதன் தலைவர் சசிகுமார் கெந்தம் பேசியதாவது:
மின்னணுவியல் துறை நவீன நாகரிகத்தின் உள்கட்டமைப்பாக மாறியுள்ளது. கொள்கை தெளிவு மற்றும் திறமையான மனிதவளம் வாயிலாக, தமிழகம் ஒரு வலுவான சூழல் அமைப்பை உருவாக்கி உள்ளது. உலகளவில் மின்னணு துறையில் கவனம் ஈர்க்கும் நாடாக நம் நாடு மாறும் என்பதை தாண்டி, நாம் எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைகிறோம் என்பது முக்கியம்.
உலகின் மின்னணுவியல் மையமாக இந்தியா மாறுவதற்கு வழிவகுக்கும் வகையில் மதிப்பு கூட்டு உருவாக்கத்துக்கும், செலவு மற்றும் திறன் மேம்பாட்டுக்கும் வலுவான திட்டத்தை கையில் எடுப்பது அவசியம். இதற்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

