ADDED : மார் 07, 2024 01:33 AM

சென்னை: முக்கிய நகரங்களில் மட்டும் அல்லாது, தமிழகம் முழுதும் ஸ்டார்ட் அப் மையங்களை துவக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக அரசின், ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு முதலீடு, சந்தை வாய்ப்பு போன்றவற்றை ஏற்படுத்தி தருகிறது.
தற்போது, சென்னை, மதுரை, ஈரோடு, திருநெல்வேலியில், மண்டல ஸ்டார்ட் அப் மையங்கள் செயல்படுகின்றன. அவற்றில், இளைஞர்களை அழைத்து, தொழில் நிறுவனங்கள், தொழிலில் சாதித்தவர்கள் வாயிலாக, புதிய தொழில் துவக்க ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஏற்கனவே, தொழில் துவக்கிய நிறுவனங்களுக்கு முதலீடு, ஏற்றுமதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது.
இந்நிலையில், முக்கிய நகரங்களில் மட்டும் அல்லாது, தமிழகம் முழுதும் ஸ்டார்ட் அப் மையங்களை துவக்க, தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.
ஏற்கனவே சேலம், ஓசூர், கடலுார், தஞ்சையில் ஸ்டார்ட் அப் மையங்கள் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இவை, விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளன.
இதை தொடர்ந்து, துாத்துக்குடி, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி என, தமிழகம் முழுதும் ஸ்டார்ட் அப் மையங்களை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இளைஞர்களுக்கு மாவட்டத்திலேயே வேலை கிடைப்பதுடன், உள்ளூர் பொருளாதாரமும் மேம்படும்.
ஸ்டார்ட் அப் டி.என்., நேற்று முன்தினம் வேளாண் மற்றும் உணவு தொழில்நுட்ப மன்றத்தை துவக்கியுள்ளது. இதன் வாயிலாக, வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்களுக்கு புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆலோசனை வழங்கப்படும்.

