உயிர் உர தயாரிப்பாளர்களுக்கு 'ஸ்டார்ட் அப் டி.என்' அழைப்பு
உயிர் உர தயாரிப்பாளர்களுக்கு 'ஸ்டார்ட் அப் டி.என்' அழைப்பு
ADDED : ஜூன் 12, 2026 03:59 AM

சென்னை; உயிர் உரங்கள், பசுமை தொழுஉரம், மட்கு உரம் உள்ளிட்ட உயிர் உர தயாரிப்பில் ஆர்வமுள்ள 'ஸ்டார்ட் அப்' மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதியுதவி பெறவும், முதலீட்டாளர்களை சந்திக்கவும் 'ஸ்டார்ட் அப் டி.என்' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மண்ணின் வளத்துக்கும், நீடித்த விவசாயத்துக்கும் இயற்கை உரங்கள் காரணமாக உள்ளன. உயிர் உரங்கள், பசுமை தொழு உரம், நுண் உரம், மட்கு உரம், துல்லிய முறை உரம் போன்ற உயிர் உர தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மற்றும் ஆர்வமுள்ள ஸ்டார்ட் அப் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் தொழிலை மேம்படுத்த, முதலீட்டாளர்களை சந்திக்க அழைப்பு விடுக்கப்படுகிறது.
இச்சந்திப்பின் வாயிலாக நிறுவனங்கள் தங்களின் இயற்கை உரத்தொழிலை முன்னேற்றவும் அதற்கான நிதியுதவியை பெறவும், வல்லுநர்களின் ஆலோசனை பெறவும் வாய்ப்பாக அமையும். இந்த சந்திப்பு நிகழ்வை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என் நிறுவனம் நடத்த உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், form.startuptn.in/ICBA தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு நிகழ்ச்சி நடக்கும் தேதி, நேரம், இடம் ஆகிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
