ADDED : ஜூலை 31, 2025 02:24 AM

புதுடில்லி,:நாட்டின் சர்க்கரை உற்பத்தி ஜூலை மாதத்தில் கசந்தது என, புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு உற்பத்தி ஆண்டில் 18 சதவீதம் சரிந்து 2.58 கோடி டன்னாக சரிந்துள்ளதாக கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகளின் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வரை சர்க்கரை உற்பத்தி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், நடப்பு 2024 - 25 சர்க்கரை உற்பத்தி ஆண்டில், உற்பத்தி நிலவரம் குறித்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
நடப்பு சர்க்கரை உற்பத்தி ஆண்டில், ஜூலை மாதம் வரையிலான காலத்தில் உற்பத்தி 18.38 சதவீதம் சரிந்துள்ளது. முக்கிய மாநிலங்களில் உற்பத்தி சரிவு, கால நிலை மாற்றம், கரும்பு பற்றாக்குறை மற்றும் எத்தனால் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் ஆகியவையே இதற்கு காரணமாகும்.
தற்போது வரை 2.58 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், பருவம் முடிவடைவதற்கு முன்பாக 2.61 கோடி டன்னாக உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கர் நாடகா மற்றும் தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு உற்பத்தி நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் ஏழு ஆலைகளும், தமிழகத்தில் ஒன்பது ஆலைகளும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.

