ADDED : ஜூன் 06, 2025 01:24 AM

புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் புதிய முடிவால், தமிழகத்தில் தொழில் பாதிப்பு மற்றும் வேலையிழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பென்சில்வேனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்டீல், அலுமினிய இறக்குமதி வரியை இருமடங்காக்கப் போகிறேன் என்றார்.
அதன்படி, கடந்த செவ்வாய் கிழமை உத்தரவில் கையெழுத்திட்ட அவர், இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக்கப்படுகிறது என்றார். 25 சதவீத வரி விதித்தால், மதில் மீது ஏறி உள்ளே குதித்து விடுகின்றனர். 50 சதவீதம் வரி என்றால் அப்படி செய்ய முடியாது என்றும் அவர் பேசினார்.
அவரது இந்நடவடிக்கை, இந்தியா உட்பட சர்வதேச வர்த்தக சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். கடந்த 4ம் தேதி அமலுக்கு வந்துவிட்ட இந்த வரி விதிப்பில் இருந்து, பிரிட்டனுக்கு மட்டும் டிரம்ப் விலக்கு அளித்திருக்கிறார்.
அவரது இந்நடவடிக்கை, அமெரிக்கா பர்ஸ்ட் என்ற வர்த்தக கொள்கையில், எதிர்வரும் தேர்தல்களை மனதில் கொண்டது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான ஸ்டீல், அலுமினிய பொருட்கள் மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்பாகும். அமெரிக்காவின் இருமடங்கு வரி விதிப்பால் ஏற்றுமதி குறைந்து, இந்நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்றும், வேலையிழப்பு ஏற்படும் என்றும் அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே குறைந்த விலை இரும்பு, அலுமினிய பொருட்கள் இறக்குமதி அதிகமாக இருப்பதுடன், அமெரிக்காவின் இருமடங்கு வரி விதிப்பும் சேர்ந்து, நிலைமையை மோசமாக்கி இருப்பதாக, 'அலுமினியம் அசோசியேஷன் ஆப் இந்தியா' கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் புதிய வரி விதிப்பு, இந்திய ஏற்றுமதியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என, 'இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் ஆப் இந்தியா' எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி
2024 - 25 நிதியாண்டு
இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள்: ரூ.5,000 கோடி
இரும்பு பொருட்கள்: ரூ.26,350 கோடி
அலுமினிய பொருட்கள்: 7,410 கோடி
மொத்தம்: 38,760 கோடி ரூபாய்
- குமாரசாமி
மத்திய அமைச்சர்,
கனரக தொழில் துறை