சுற்றுலா துறையில் முதலீடு ஈர்க்க பிப்ரவரியில் தமிழக அரசு மாநாடு
சுற்றுலா துறையில் முதலீடு ஈர்க்க பிப்ரவரியில் தமிழக அரசு மாநாடு
ADDED : ஜன 04, 2026 02:11 AM

சென்னை:தமிழகத்தில், சுற்றுலா துறையில் முதலீடுகளை ஈர்க்க, அடுத்த மாதம் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்த உள்ளது.
தமிழகம் முழுதும் பாரம்பரியமான கோவில்கள், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், நீளமான கடற்கரை என, பல சுற்றுலா மையங்கள் உள்ளன. தேசிய மற்றும் உலக சுற்றுலா தலமாக தமிழகத்தை மாற்ற அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, சுற்றுலா துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க, பல சலுகைகள் அடங்கிய தனி கொள்கையும் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலா துறையில், 20,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, தனியாருடன் இணைந்து, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் முதல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை கடலோர சுற்றுலா வழித்தடம், திருச்சி - தஞ்சை - நாகை இடையில் சோழர் கால சுற்றுலா வழித்தடம், மதுரை - சிவகங்கை மரபுசார் சுற்றுலா வழித்தடம், கோவை - பொள்ளாச்சி வரை இயற்கை நலன் சுற்றுலா வழித்தடம் என, முக்கிய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுற்றுலா தொழில் கொள்கை, சுற்றுலா துறைக்கு தொழில் துறை அந்தஸ்தை வழங்குகிறது. சுற்றுலா துறையில் தனியார் முதலீட்டை ஈர்க்க, சென்னையில் வரும் பிப்ரவரியில் சுற்றுலா துறையை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை அரசு நடத்த உள்ளது.
இம்மாநாட்டில் பொழுதுபோக்கு பூங்கா, ஓட்டல், தங்கும் விடுதி, மாநாட்டு கூடம் உள்ளிட்ட சுற்றுலா திட்டங்களுக்கான அனைத்து அனுமதிகளையும் ஒரே இணையதளத்தில் வழங்கும் வகையில் தனி இணையதளமும் அறிமுகம் செய்யப்படும்.
இதற்கான பணிகளை வழிகாட்டி நிறுவன அதிகாரிகள், சுற்றுலா துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

