ADDED : அக் 20, 2025 10:35 PM

சிவகாசி: தீபாவளியை முன்னிட்டு 6,000 கோடி ரூபாய்க்கு மேல் பட்டாசு வர்த்தகம் நடந்துள்ளதால், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன; 4,000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.
ஏற்கனவே பெய்த மழை, அதிகாரிகள் ஆய்வு உட்பட பல்வேறு காரணங்களால், இந்த தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைந்தது. சரவெடி தயாரிக்கக்கூடாது, பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால், தேவையான ரகங்களில் பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியவில்லை.
அதே சமயத்தில் மக்கள் விரும்பும் வகையில், புது ரக பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
'இந்த ஆண்டு தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் முழுமையாக விற்பனையாகி, 6,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது' என, தமிழ்நாடு கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கமான டான்பாமா தலைவர் கணேசன் கூறினார்.