22 தொழிற்பேட்டை பணிகளை அக்டோபருக்குள் முடிக்க இலக்கு
22 தொழிற்பேட்டை பணிகளை அக்டோபருக்குள் முடிக்க இலக்கு
ADDED : மே 06, 2025 11:21 PM

சென்னை:'தமிழகத்தில், 643 கோடி ரூபாய் செலவில், 22 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன; முதல் கட்ட பணிகள் வரும் அக்டோபருக்குள் முடித்து, திறப்பு விழாவிற்கு கொண்டு வர வேண்டும்' என, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது:
தொழில் வணிகத்துறை மற்றும் சிட்கோ செயல்படுத்தி வரும் குறுங்குழும திட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்டம்.
அதில், 44 கோடி ரூபாய் மானியத்தில், 54 கோடி ரூபாய் செலவில் இதுவரை, 11 குறுங்குழுமங்கள் துவக்கப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக முந்திரி தொழில், அச்சு தொழில், கயிறு, உப்பு, உணவு என, பல துறையினர் பயனடைந்துள்ளனர்.
அந்த வகையில், 121 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வரும், 22 குறுங்குழும பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கலைஞர் கடன் உதவி மற்றும் கலைஞர் கைவினை திட்டத்தில் அதிகம் பேருக்கு கடன் வழங்க வேண்டும்.
ஐந்து சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் நடப்பாண்டில், 635 கோடி ரூபாய் மானியத்தில், 34,250 நபர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆண்டு இறுதி வரை காத்திருக்காமல், ஆறு மாதங்களுக்குள் இலக்கை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

